தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிமாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி, அங்கு ஆக்சிஜன் நிரம்பிய பின் ரயில்கள் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
அதேபோல் நேற்று (ஜூன்.1) மதுரை விமான நிலையத்திற்கு 24 ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட மூன்று காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், அவை ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்ட லாரிகள் அங்கு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக் கூடிய ஆக்சிஜனை நிரப்பிய பின், மீண்டும் ரயில் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.