புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்த அழகப்பன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா ஆலவயல் கிராமத்திலுள்ள ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் பங்குனி மாதம் பழத்திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
200 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி பழத்திருவிழா நடைபெறவுள்ளது. காலையில் பழத்திருவிழா முடிந்து மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மார்ச் 17ஆம் தேதி அனுமதி கேட்டு மனு அளித்தோம். ஆனால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் திருவிழாக்கள், திருமணங்கள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
எனவே, ஜல்லிக்கட்டு போட்டிக்கு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கரோனா கட்டுப்பாடுகள் நீக்கிய பிறகு மனுதாரர் மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சித்திரைத் திருவிழா குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை