கிருஷ்ணகிரி மாவட்ட, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் "இந்திய நுகர்வோருக்கு ஒரு திருப்புமுனை” என்ற தலைப்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் உரையாற்றும் போது, "நுகர்வோருக்கு உரிமை உண்டு என்று தெரிந்து கொண்டு பொருட்கள் வாங்கும்போது தரமான பொருட்களா என சரிபார்த்து வாங்க வேண்டும். பொருட்களை வாங்கியதற்கான ரசீதுகள் கேட்டுப் பெறவேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் பொருட்கள் வாங்கும் போது காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும்.
மேலும் வீட்டில் படிக்காத பெற்றோர்கள், அவ்வாறு வாங்கியிருந்தால் அதனைப் பார்த்து அவர்களிடம் தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் நுகர்வோர் உரிமைகள் பற்றி தெரிந்துக் கொண்டு நுகர்வோர் நீதிமன்றங்களை நாடி இழப்பீடு கோரலாம்.
ஆகவே பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என மாவட்ட வருவாய் அலுவலர் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல், கவிதைப் போட்டி, கட்டுரை ஆகியப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இதையும் படிங்க: '1.30 மணி நேரத்தில் 50 முட்டைகளில் 50 தலைவர்களின் உருவம்' - வரைந்து அசத்திய கோவை மாணவி