கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையின் திட்ட மேலாளராக திருச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் அறிவுக்கரசு (41). இவருக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செந்தில்குமார், நாகராஜ் ஆகியோருக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் செயல்பட்டுவரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் முறைகேடு நடப்பதாக கூறி சில ஆதாரங்களை வெள்ளியணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செந்தில்குமார், நாகராஜ் ஆகியோர் சேகரித்துள்ளனர்.
இதனால் மேலாளர் அறிவுக்கரசு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தன்னை தாக்கியதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெள்ளியணை காவல் நிலையத்தில் ஊழியர்கள் மீது புகார் அளித்தார்.
இதனை கண்டித்து கரூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலாளர் சிட்டி பாபு தலைமையில் பத்து நபர்கள் மனு ஒன்றை அளித்தனர் முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆம்புலன்ஸ் சங்க செயலாளர் சிட்டிபாபு கூறுகையில்:- செந்தில்குமார், நாகராஜ் ஆகிய இருவரும் தாங்கள் பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ரேடியேட்டர், குளிர்சாதன கருவி உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளனர்.
இதனை அறிந்த மேலாளர் அறிவுக்கரசு முறையாக விசாரணை செய்யாமல் அவர்களை பணி மாற்றல் செய்தார். இதனை இருவரும் ஏற்க மறுத்தனர். இதனால் அவர் வெள்ளியணை காவல் நிலையத்தில் ஊழியர்கள்மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளதாக சிட்டிபாபு குற்றம் சுமத்தினார். மேலும் மாவட்ட திட்ட மேலாளர் அளித்த பொய்ப் புகாரை திரும்பப் பெற வேண்டும் என கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
இதையும் படிங்க: ஓமலூர் அருகே வேன் மீது பஸ் மோதி 6 நேபாளிகள் உயிரிழப்பு!