கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் வட்டார பகுதிகளில் இன்று (அக். 23) காலை மூன்று பெண்கள் கொண்ட ஒரு கும்பல் வீடு வீடாகச் சென்றது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவர்களது ஸ்மார்ட் ரேஷன் அட்டையை கேட்டுப் பெற்று ஆய்வு செய்தனர்.
பின்பு அவர்கள் கொண்டு வந்திருந்த பச்சை வண்ண அட்டையை கொடுத்து அந்த அட்டையை ரேஷன் அட்டையோடு எந்த ரேஷன் கடையில் கொடுத்தாலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு ரேஷன் அட்டையுடன் பச்சை வண்ண அட்டையைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். அதற்கு கட்டணமாக தலா 30 ரூபாயும் வசூல் செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி தங்களை அறிமுகம் செய்து கொண்டதால், இவர்களின் பேச்சை பொதுமக்கள் நம்பினர். அதன்படி வீட்டிற்கு 30 ரூபாய் வீதம், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் போட்டி போட்டு கொண்டு பணத்தை கொடுத்து அட்டையை பெற்றுக்கொண்டனர்.
இதன் பின்னர் சிலருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் விசாரித்தனர். அப்போது அப்பகுதி மக்களை அந்தக் கும்பல் ஏமாற்றிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சந்திப்பில் திரண்ட பொதுமக்கள் உடனடியாக மோசடி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மோசடியில் ஈடுபட்டவர்களை கோட்டார் காவல் துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க... வைஃபை ஏடிஎம் கார்டுகளை குறிவைத்து நூதன மோசடியில் ஈடுபட்டவர் கைது!