சிண்டிகேட் வங்கி கனரா வங்கியோடு இணைந்த பிறகு அதன் நகை கடனுக்கான சேவை கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் நாகர்கோவில் கனரா வங்கி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், "சிண்டிகேட் வங்கி கனரா வங்கியோடு இணைந்த பிறகு 1.5 சதவீதமாக இருந்த சேவை கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கம்ப்யூட்டரில் நகை கடன் கணக்கு ஆரம்பிக்க கட்டணம், சிபில் செக்கிங் கட்டணம், கம்ப்யூட்டரில் கணக்கு மூடுவதற்கு கட்டணம் என தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
இவைகளுடன் சேர்த்து 18 சதவீத ஜிஎஸ்டி வரி என பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது. சேவை கட்டணங்கள் என்ற பெயரில் கனரா வங்கியில் கொள்ளை நடக்கிறது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே கனரா வங்கியில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.
பின்னர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: அரியலூரில் விவசாயிகள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்!