காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க, அப்பகுதி தாலுகாவைச் சேர்ந்த பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிலம் எடுப்புப் பணிகளை மேற்கொண்டது.
அரசு நிலத்திற்கு போலிப்பட்டா
இவ்விவகாரத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தும்போது, நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதில் ரூ.200 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், நிலத்தின் உரிமையாளர்கள் பலர் அரசின் அனாதீனம், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து, பட்டா மாற்றி இழப்பீட்டுத் தொகையை பெற்றுள்ளனர் என்பது குறித்துப் புகார் எழுந்தது.
இந்த மோசடி புகார் குறித்து பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளரான நவகோடி நாராயணன் என்பவர் தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையருருக்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நில நிர்வாக ஆணையர், இது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இப்புகாரை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க, நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார்.
ரூ.200 கோடி முறைகேடு புகாரில் நடவடிக்கை
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் அளித்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், ரூ.200 கோடி இழப்பீடு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், அப்போது தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், புகார் அளித்த நவகோடி நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீமன் தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்திற்கு முறைகேடாக பட்டா பெற்று இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொண்ட 83 பெயர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட 83 பேரின் நில பட்டாக்களையும் ரத்து செய்த காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் அவற்றை அரசு நிலங்களாக மாற்றி உள்ளனர்.
அத்துடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு இழப்பீடு வழங்கி, ரூ.200 கோடி முறைகேடு புகார் வழக்கு விசாரணையைத் தீவிரமாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இதையும் படிங்க: வெட்டப்படும் மரங்கள்.... கலங்கும் சமூக ஆர்வலர்கள்