காஞ்சிபுரம் : நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கவுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பை வரும் 31ஆம் தேதி வெளியிடுவதாகவும் இன்று அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அவரது அரசியல் வருகை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், " ரஜினிகாந்த் அறிவித்துள்ள மதசார்பற்ற அரசியலை நாங்கள் வரவேற்கிறோம். ஆன்மிகத்திற்கு அப்பாற்பட்டவர் நடிகர் கமல்ஹாசன் என்பதால் அவருடன் கூட்டணி அமைக்கமாட்டார். அதேபோல், ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று கூறியுள்ளதால் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கமாட்டார்.
தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர்கள் ரஜினியுடன் இணைவார்கள் என நம்புகிறேன். அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்கினால் அவரும் ரஜினியுடன் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
முதலமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்த இருக்க வேண்டுமென தமிழ்நாடு மக்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு அவர் முதலமைச்சர் வேட்பாளரானால், பெருவாரியான தமிழ்நாடு மக்கள் அவரை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் கிடையாது என அவர் கூறியதுபோல், மக்களுக்காக அவர் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ரஜினியின் 'தர்பார்' ஆரம்பம்: போயஸ் கார்டனில் ரசிகர்கள் கொண்டாட்டம்