ஈரோடு: கருங்கவுண்டன் வலசு, பெருமாள் மலை பகுதியிலுள்ள சேனாங்காட்டுதோட்டத்தை சேர்ந்த விவசாயி கருப்பண கவுண்டர் (75), இவரது மனைவி மல்லிகா (55), இத்தம்பதியின் மகள் தீபா (30), இவர்கள் தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் (65) ஆகிய நால்வரும் இன்று (ஜூன்.26) வீட்டில் இருந்தனர்.
கரோனா பரிசோதனை
அப்போது, கரோனா பரிசோதனை செய்வதாகக் கூறி கருப்பண்ண கவுண்டர் வீட்டிற்கு வந்தவர், நால்வருக்கும் மாத்திரை கொடுத்து விட்டு, ஏதோ ஒரு கருவி மூலம் பரிசோதனை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
மாத்திரை உட்கொண்ட சுமார் அரை மணி நேரத்தில் நால்வருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மல்லிகா உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. கருப்பண்ண கவுண்டரும், அவரது மகள் தீபாவும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குப்பம்மாள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது தொடர்பாக, தகவலறிந்த ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசிமோகம், துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், சென்னிமலை காவல் ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: 'வாழ்க்கையே விளையாட்டு தான்' - நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்