பவானிசாகர் அணை முன்பு, பவானிசாகர் - பண்ணாரி சாலையில் பாலம் ஒன்று உள்ளது. சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு பவானிசாகர் அணை கட்டுமானப் பணிக்காக பொருட்களை கொண்டுச்செல்ல பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்ட இப்பாலம், பின்பு புஞ்சைபுளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் வழியாக பண்ணாரி செல்வதற்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பாலத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலத்தில் பெரிய ஓட்டை விழுந்ததால் வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, கொத்தமங்கலம், பட்டரமங்கலம், புதுபீர்கடவு, சுஜில்குட்டை, கல்லம்பாளையம், அல்லி மாயாறு, தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்கள் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டன.
இதனால் அவதியடைந்த மக்கள் தொட்டம்பாளையம் பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த இப்பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் கட்ட ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது.
ஆனால், டெண்டர் விடப்பட்டு பலமாதங்கள் ஆகியும் இதுவரை புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு - பவானிசாகர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு நீர் திறப்பு!