சீனாவில் உள்ள உருமிக் என்ற இடத்தில் உள்ள சைன்ஜங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்த ஈரோடு மாவட்ட பெருந்துறையைச் சேர்ந்தவர் மாணவர் விஸ்வநாத் (24). கடந்த 15ஆம் தேதி விமானம் மூலமாக அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர், தனது உடலில் சளி தொந்தரவு ஏற்பட்டதைக் கண்டு அதிர்ந்து போன விஸ்வநாத், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கொரோனோ வைரஸ் சிறப்பு சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
மருத்துவர்கள் விஸ்வநாத்துக்கு கொரோனோ வைரஸ் தாக்குதல் உள்ளதா என ரத்த மாதிரியை எடுத்து சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி கொரோனோ வைரஸ் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த விஸ்வநாத் யாரிடமும் சொல்லாமல் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த விஸ்வநாத் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்பு, பெருந்துறை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் விஸ்வநாத்தின் செல்ஃபோனுக்குத் தொடர்பு கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், தான் மருத்துவம் பயின்று வருவதாகவும் சொகுசாக வாழ்ந்து வந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்படுத்தபட்டுள்ள கொரோனோ வைரஸ் சிறப்புப் பிரிவில், கழிவறை இல்லாததாலும் இரவில் அதிக கொசு தொந்தரவு இருந்ததின் காரணமாகவும் தான் அவதிப்பட்டு வந்ததால், தனது வீட்டிற்கு வந்துவிட்டதாக விளக்கம் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது மருத்துவர்களின் அறிவுரையின்படி விஸ்வநாத் தனது வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்!