ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், மல்லன்குழி கிராமத்தில் உள்ள விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த காட்டு யானையை அருகே சென்று பார்த்தபோது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது. அருகே விவசாயத் தோட்டத்தில் சட்டவிரோத மின்வேலி ஏதாவது உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு செய்தபோது அப்பகுதியில் மின்வேலி ஏதும் இல்லாதது தெரிய வந்தது.
பெண் யானை உடல்நலக்குறைவால் இருந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிவதற்காக கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலைப் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் கைது, 4 பேர் தப்பியோட்டம்