திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று(ஜூன்.26) அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக் காவடி எடுத்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார் சேவை பராமரிப்புப்பணிக்காக 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ஆகியவை மூலம் மலைக்கோயில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் மொட்டையடிக்கும் இடங்களான சரவணப்பொய்கை, ஒருங்கிணைந்த முடி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து காவல் துறையினர் பலர் வார விடுமுறை எடுத்ததால், கூட்டத்தைக்கட்டுப்படுத்த முடியாமல் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலை மிட்டாய்க் கடை- 'ஒரு நிலையம் ஒரு பொருள்' திட்டம் தொடக்கம்!