திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரிய புத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்.(வயது 51) இவர் தனக்கு குடும்ப பிரச்னை இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் கிராம ஜோதிடர் சசிகுமார் (51) என்பவதரை அணுகியுள்ளார்.
அப்போது தங்கவேலிடம், உங்களது தோட்டத்தில் தங்கப் புதையல் உள்ளது. அதை எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய தங்கவேல், ஜோதிடர் சசிகுமார் கூறியபடி பூஜைகள் செய்துள்ளார். இதனிடையே சிறிது சிறிதாக அவ்வப்போது பணம் மற்றும் தங்க நகைகளை தங்கவேலிடமிருந்து ஜோதிடர் சசிகுமார் பெற்றுள்ளார்.
ரூ. 22 லட்சம் மற்றும் 45 சவரன் தங்க நகைகளையும் வாங்கி கொண்டவர் தனக்கு புல்லட், கார், செல்ஃபோன் வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி புல்லட், செல்போன், ஒரு கார் ஆகியவற்றை விவசாயி தங்கவேல் ஜோதிடர் சசிகுமாருக்கு வாங்கி கொடுத்துள்ளார், ஆனால், பூஜைகள் செய்த ஜோதிடரோ புதையல் எடுத்து தரவில்லை.
ஒரு கட்டத்தில் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த தங்கவேல், சசிகுமாரிடம் புதையல் எடுத்துத் தராவிட்டால் வாங்கிய பொருட்களை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து புல்லட், கார், செல்ஃபோன் ஆகியவற்றை திருப்பிக் கொடுத்த ஜோதிடர் சசிகுமார் நகை மற்றும் பணத்தை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால், தங்கவேல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஆய்வாளர் பானுமதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்ட ஜோதிடர் சசிகுமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சசிகுமார் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.