திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா எரியோடு பேரூராட்சி மன்ற அலுவலகத்தில், இன்று (செப்.29) பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர், துணைத் தலைவர் உள்பட 9 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது பட்டியல் இனத்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 3 வார்டுகளான மறவபட்டி, மீனாட்சிபுரம், பாண்டியன் நகர் பகுதிகளில் இது நாள் வரை பொது நிதியிலிருந்து எவ்விதமான பொதுப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவா, பேரூராட்சித் தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர், மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அதன் பிறகு அவர் பேட்டியளித்தபோது, “எரியோடு பேரூராட்சியில் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட 3 வார்டுகளில் எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. அப்பகுதிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.
மற்ற வார்டுகளில் பேரூராட்சி நிர்வாகத்தின் முன்அனுமதி பெறாமல், பேரூராட்சி மன்றத் தலைவரின் உறவினர்களால் வேலைகள் நடைபெறுகின்றன. அதுவும், மிகவும் தரமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் 15 வார்டுகளில் கூடுதலான வாக்குகளை 4-வது வார்டு மீனாட்சிபுரத்தில் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். அவரும் இந்த வார்டுகளைப் புறக்கணிக்கிறார். அவர்களைக் கேட்டால் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனையின் பேரில்தான் நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்கிறார்கள்.
எனவே, எரியோடு பேரூராட்சியில் இதுபோல் நடக்கும் முறைகேடுகளை சரி செய்ய மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.