கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குறுங்குடி கிராமத்தின் அருகேயுள்ள இடைநாறூர் என்ற பகுதியில் பட்டாசு உற்பத்தி குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகின்றது. அதில் சின்னத்துரை என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில், அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட பலரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (செப்.4) பட்டாசு உற்பத்திக்குத் தேவையான வெடிபொருள்களை கையாளும்போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த விபத்தால் ஆலையின் கட்டடம் தரைமட்டமானது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை, மாவட்ட காவல் துறை ஆகிய அலுவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது, அவர்களும் வழியிலேயே உயிரிழந்தனர்.
பட்டாசு விபத்தில் ஒன்பது பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி நிவாரண உதவியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக எம்பிக்கள் மக்களின் குரலாக ஒலிப்பார்கள் - ஸ்டாலின்