கடலூர் அடுத்த வடக்கு ராமாபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ள நிலையில், இந்தச் சமத்துவபுரம் பின் பக்கம் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டி தர தனியார் தொண்டு நிறுவனம் 2012 ஆம் ஆண்டு முன்வந்தது.
அதன் பேரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2013 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு 130 வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகள் சரியில்லை தங்களை மீண்டும் அகதிகள் போல் அடைத்து வைக்கும் நிலையில் வீடுகள் உள்ளது என கூறி, அதில் இலங்கை தமிழர்கள் குடியேற மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதில் சில வீடுகள் பாழடைந்து உள்ளன. தற்போது அந்த இடத்தில் 130 வீடுகள் இருந்த நிலையில், அவ்வப்போது சமுக விரோத செயல்கள் அந்த வீடுகளில் நடைபெறுவதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது. மேலும் வீட்டிலிருந்த மின்சார வையர்கள் காணாமல் போகிறது எனவும் புகார்கள் எழுந்தன.
அதன் பின் 130 வீடுகளில் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் 50 வீடுகள் மட்டும் தற்போது பாழடைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள இளைஞர் சிலர் பாழடைந்த வீட்டிறக்கை சென்று கேம் விளையாடுவது, தூங்கவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
திடீரென விழுந்த வீடு
அந்த வகையில் இன்று மதியம்(ஜன.27) பாழடைந்த வீட்டிற்கு சென்ற சுதீஷ்குமார், வீரசேகரன்,புவனேஷ் ஆகிய மூன்று 17 வயது சிறுவர்கள் கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பாழடைந்த அந்த வீடு திடீரென முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சத்தத்தை கேட்டு அதிர்ந்த அந்த பகுதி மக்கள் இடிந்த வீட்டில் சிக்கிக் கொண்ட 3 மீட்க தொடங்கினர். தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 சிறுவர்களையும் மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வீரசேகரன், சுதீஷ் குமார், ஆகியோர் உயிரிழந்தனர்.
புவனேஷ் எனும் சிறுவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணை நடத்தி மீதமுள்ள வீடுகளையும் பார்வையிட்டனர். பின்னர் அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!