கோவை: திருப்பூர் முதலாம் குடிநீர் திட்டத்தில், கோவை மாவட்டம் அன்னூர், பொகலூர், ஊத்துப்பாளையம், நம்பியம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பவானி ஆற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில், திருப்பூர் முதல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் ஊத்துப்பாளையம் பகுதி உட்பட அனைத்து குடிநீர் இணைப்புகளும் துண்டிக்ககப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நான்காம் திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. தற்போது பல கிராமங்களில் குடிநீர், இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அன்னூர் அடுத்துள்ள ஊத்துப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் குடிநீர் வருவதில்லை எனக்கூறி, ஊத்துப்பாளையம் பகுதி பொது மக்கள் அவினாசி- மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்னை குறித்து சட்டப்பேரவை உறுப்பினரும் சபாநாயகருமான தனபாலிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளோம் எனவும், அவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்துவந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தியதை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ’பாஜகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது'