கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு முதலிடத்தில் இருந்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பயின்று வருகின்றனர்.
கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மருத்துவமனைகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று, இரண்டு முறை என இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன்.
முதலமைச்சர் டெல்லியில் உள்ள கழக அலுவலகம் திறப்பதற்கு சென்றபோது அங்குள்ள ஆம் ஆத்மி கட்சியினரின் நிர்வாகத்தால் கட்டப்பட்ட மருத்துவமனையை பார்வையிட்டார். அந்த கட்டமைப்பை பார்த்து தமிழ்நாட்டிலும் ஏழை, எளிய மக்கள் பயனடைய வேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 708 மருத்துவ மனைகள் கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நியமித்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டத்திற்கு 72 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் மாநகராட்சிக்கு 64 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 708 மருத்துவமனைகளில் பெரும்பாலான கட்டடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது.
மருத்துவத்துறை வரலாற்றில் தமிழ்நாட்டில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை முதலமைச்சர் வரும் பிப்ரவரி 6-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர, மணியகாரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 4000ஆக உயர்ந்துள்ளது.
'இன்னுயிர் காப்போம்; நம்மை காப்போம்' திட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ரூ.56 லட்சம் உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் 500 இடங்கள் விபத்துகள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளுக்கு உட்பட்ட 679 மருத்துவமனைகளில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.1 லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்ட வரை மருத்துவமனையில் அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 125 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக தமிழில் பாடநூல்கள் வெளியிடப்பட உள்ளது. காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மேலும் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கானப் பணிகள் நடந்து வருகிறது.
வரும் 2-ம் தேதி முதலமைச்சர் 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். காசநோயாளிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.
குட்கா மீதான தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுகிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்.