கோவையில் பொள்ளாச்சி அருகே உள்ள கூழநாயக்கன்பட்டி, கோமங்கலம், கோலார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்துவருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெண்பட்டு கூடுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் உடுமலை, கோவை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நல்ல விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் பட்டுப்புழு மீது ஊசி ஈ அதிகளவு தாக்குதல் செய்துவருவதால் பட்டுப்புழு உற்பத்தித் திறனை இழந்து வருவதோடு, இறந்துபோகின்றன இதனால் பட்டுக்கூடு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நூறு பட்டுப்புழு முட்டைகள் நூறு கிலோவுக்கு மேல் பட்டுக்கூடு உற்பத்தி செய்துவந்த நிலையில் தற்போது 50 கிலோ கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. இதனால் உற்பத்தி செய்யும் செலவு அதிகரித்து, லாபம் குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
வெண்பட்டுக் கூடு உற்பத்தி பாதிப்பால், சந்தையில் அதனை மிக குறைந்த விலையில் விர்பனை செய்வதாக கூறும் விவசாயிகள் பட்டுப்புழுவை தாக்கும் ஊசி ஈயை அழிக்க வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.