சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கிய காரணமாகும். எனவே நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017இல் உத்தரவிட்டது.
உயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோயம்பத்தூர் மத்திய போக்குவரத்து துறை சார்பில் வஉசி மைதானம் அருகில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது பம்பர்கள் பொருத்தப்பட்டு வந்த நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அவற்றில் இருந்த பம்பர்கள் அகற்றப்பட்டன. மேலும் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறுகையில், "போக்குவரத்து விதிகளின்படி பம்பர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை கண்டறிந்து, அவற்றை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சோதனையானது இனி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் இருக்கும்பொழுது சென்சார்கள் சில நேரங்களில் வேலை செய்யாமல் போவதால், ஏர்பேக் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படுவதில்லை.
எனவே வாகன ஓட்டிகள் தாங்களாகவே முன்வந்து பம்பர்களை அகற்றிட வேண்டும். வாகன தணிக்கையின் பொழுது முதல்கட்டமாக ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் முறை ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொறுத்தினால் அபராதம்!