கோவை: வெறும் நான்கு ரூபாய் பாக்கி கொடுக்க மறுத்த காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர், பெட்டிக் கடைக்காரரின் காதை கடித்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரியத்தைச் செய்தது கோவைப் புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 4ஆவது பெட்டாலியினில் காவலராகப் பணிபுரியும் முகமது ஆசிக்(24) என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
கோவை சித்தாபுதூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வரும் செந்தில்குமார் என்பவர் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக மகன் செல்வசிவா (22) அவ்வப்போது கடையை கவனித்து வந்துள்ளார். மேலும், பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை இருந்ததால் கதவு இல்லாமல், தார்பாய் கொண்டு மூடி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று(ஆக.18) நள்ளிரவு வழக்கம்போல தார்பாய் கொண்டு கடை மூடப்பட்டு உள்ளே செல்வசிவா இருந்துள்ளார். அப்போது அங்கு நள்ளிரவு 2 மணிக்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் தன்னை காவல் துறையைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, சிகரெட் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அதை வாங்கிய பின் பணத்தை மறுநாள் காலை தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், செல்வசிவா சிகரெட்டுக்கான பணம் ரூ.54 அப்போதே கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேடிஎம் (paytm) மூலம் ரூ.50 அந்த இளைஞருக்கு கொடுத்துள்ளார். ஆனால், மீதம் உள்ள 4 ரூபாயை செல்வசிவா கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் செல்வசிவாவை கடுமையாகத் தாக்கியதோடு, அவரது காதையும் கடித்துள்ளார்.
இது குறித்து செல்வசிவா தனது தந்தை செந்தில் குமாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த செந்தில் குமார் படுகாயமடைந்த மகனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். மேலும் சம்பவம் தொடர்பாக செல்வசிவா காட்டூர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார், என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மது போதையில் பெட்டிக்கடையில் தகராறில் ஈடுபட்ட காவலர் முகமது ஆசிக்கை காட்டூர் காவல் துறையினர் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.