கோயம்புத்தூர்: பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 86 வயதான பாலம் சுந்தரேசன் எனும் பெண்மணி. இவர், ‘Two Loves and Other Stories' (இரண்டு காதலும் பிற கதைகளும்) எனும் தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில், புத்தகத்தை 'கல்வி துணை' எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனர் வி.சிவசுவாமிவெளியிட்டார். இந்த புத்தகத்தில் பாலம் சுந்தரேசன் ஆங்கிலத்தில் எழுதிய 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் நம் அன்றாட வாழ்க்கையில் காணும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் வகையில் உலக புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் பாணியைப் போன்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது சிறுவயதில் இருந்து, தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்க்கைச் சம்பவங்களை கதைகளாக எழுதுவதை வழக்கமாக கொண்ட இவர், பத்திரிகைகளிலும், கதம்பம் என்ற வலைப்பதிவிலும் தொடர்ந்து பல்வேறு கதைகள் எழுதியியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரின் கதைகள் புத்தக வடிவம் பெற்று வெளிவந்துள்ளது.
இது குறித்து, பாலம் சுந்தரேசன் கூறுகையில், “ தான் அன்றாட வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை எனது கற்பனைகளுடன் சேர்த்து எழுதியுள்ளேன். 2010 ஆம் ஆண்டு வலைப்பதிவு(blog) ல் கதைகளை எழுதத் துவங்கினேன். இந்த 10 ஆண்டுகளாக, எழுதப்பட்ட கதைகள் மற்றும் Blogல் எழுதியதை எனது மகன், புத்தகமாக வெளியிடலாம் என்று யோசனை வழங்கியதன் பேரில், இன்றைய தினம் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த புத்தகத்தில் உரையாடுவது போன்று அதிகமாக இருக்கும். இது என்னுடைய தனித்துவம் என்று பலரும் தெரிவித்துள்ளனர். படிப்பு அனைவருக்கும் அவசியம் என்று கூறிய அவர், அனைவராலும் படிக்க முடியும் எனவும், அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்” என இளைய சமுதாயத்தினருக்கு அறிவுறுத்தினார்.
இந்த புத்தகம் கருட பிரகாஷன் என்ற வட இந்திய பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புத்தகம் www.garudabooks.com என்ற இணைய வழியில் வாங்க இயலும். மேலும், கூடிய விரைவில் கடைகளிலிம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பு; மருத்துவக்கட்டமைப்பை சரிசெய்ய ரூ.49 கோடி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்