சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை கானத்தூர் இந்திரா தெருவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் கடந்த 5 வருடங்களாக கட்டட தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (டிச.04) காலை கட்டிட தொழிலாளர்கள் தனது வாடகை வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் மதில்சுவர் இடிந்து விழுந்தது. அதில் உறங்கி கொண்டிருந்த ஷேக் அப்ரோச், முஹம்மது டோபிக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றொறு நபரான ஹாசிம் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கானத்தூர் காவல் துறையினர் இறந்து போன இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தொடர்ந்து விசாரணை செய்ததில் நேற்று (டிச.03) இரவு பெய்த மழையில் அவசர அவசரமாக அந்த மதில்சுவர் கட்டியதாகவும், மழையில் கட்டியதால் சுவர் இடிந்து விழுந்ததாகவும் தெரியவந்தது.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக்ஜாம் புயல்; இன்று இரவு வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை!