சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு மழை மற்றும் காற்று வீசியது.
இதனால் சென்னையின் பல இடங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனிடையே நேற்றைய தினம் (டிச.9) காந்தி சிலைக்கும், நேப்பியர் பாலத்துக்கும் இடையிலான காமராஜர் சாலையில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் இந்த காமராஜர் சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர வேலைக்காக செல்பவர்களுக்கு மட்டும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (டிச.10) காலை 6 மணி முதல் போக்குவரத்து வழக்கம்போல் அனுமதிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் மழைநீர் பெருக்கு காரணமாக எந்தவொரு போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், மாநகர பேருந்துகள் இயக்கத்தில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரையைக் கடந்தது மாண்டஸ் - சென்னையில் கோர தாண்டவம்