கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கு உத்தரவினால் ஏழை மக்கள் பாதிப்பு அடையக் கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு சார்பாக ஏப்ரல் மாதம் ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. இதனிடையே கரோனா வைரஸ் கட்டுக்குள் வராததால் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மே மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க அரசு ஆணையிட்டது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது.
இன்று வரை 1 கோடியே 89 லட்சத்து ஆயிரத்து 68 குடும்பங்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல ஏப்.15ஆம் தேதியன்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கு முன்பே, ஏப். 13ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற ஏப்.24, 25 ஆகிய இரு தினங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் (Token) வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மாஸ்க்குகள்!