கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கோயில்கள், சுற்றுலா என அனைத்தும் தடை செய்யப்பட்டன.
இதையடுத்து மூன்றாம் கட்டமாக மே17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்றாக தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 33 விழுக்காடு பணியாளர்களைச் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தி கோயில்களைத் திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. கோயிலில் நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள மூன்று கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், சளி, இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் உள்ள பணியாளர்களைப் பணியில் அமர்த்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதால், அவர்கள் பணிக்கு வர வேண்டாம் என்றும், கோயில் வளாகத்தில் பணியாளர்கள் தவிர பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளது.