அரசின் ரூ.2,650 கோடி மதிப்பிலான ஊரகச்சாலை மேம்பாட்டு டெண்டர்களின் அறிவிப்பாணையை ரத்துசெய்து இன்று (அக்.9) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 14 ஆவது நிதிக்குழு நிதியிலான அனைத்துப் பணிகளையும், ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும். ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர்களை வைத்து “இ-டெண்டர்” விடும் முறையை அதிமுக அரசு இத்தோடு மூட்டை கட்டித் தூக்கியெறிய வேண்டும்.
ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்துசெய்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள மகத்தான தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.
அரசியல் சட்டம் தந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட நினைத்த அதிமுக அரசுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி!
ஆகவே உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் 14 ஆவது நிதிக்குழு நிதியிலான சாலை மேம்பாட்டுப் பணிகளாக இருந்தாலும் சரி, ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணி நிதிகளாக இருந்தாலும் சரி, ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும். ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களை வைத்து “இ-டெண்டர்” விடும் முறையை இத்தோடு மூட்டை கட்டித் தூக்கியெறிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரகச்சாலை மேம்பாட்டு டெண்டர்கள் அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு