கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுநீரக பிரச்னை, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பிற நோய்கள் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது. சிகிச்சை அளிக்கும் பொழுது பலனளிக்காமல் உயிரிழக்கும் நிலையும் தற்போது அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக அரசு, தனியார் மருத்துவர்கள், மருத்துவ சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவர்களைக் கொண்டு 11 வகையான சிறப்பு மருத்துவக் குழுக்களை அரசு உருவாக்கியுள்ளது. அவை பின்வருமாறு...
- டயாலிசிஸ், உறுப்பு மாற்று சிகிச்சைப் பெற்றவர்களுக்கான குழு
- நீரிழிவு நோயாளிகளுக்கான குழு
- ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கான குழு
- புற்றுநோய் சிகிச்சைப் பெறுபவர்களுக்கான குழு
- கர்ப்பிணி தாய்மார்களுக்கான குழு
- குழந்தைகள், ரத்தம் உறைதல் நோயாளிகளுக்கான குழு
- இருதய நோயாளிகளுக்கான குழு
- மூத்த குடிமக்களுக்கான குழு
- காசநோய், ஆஸ்துமா, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு
- எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு
- மனநலம் காப்பதற்கான குழு
தற்போது உள்ள சூழ்நிலையில் கரோனா தொற்றில் இருந்து சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளை செய்துதர இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே காணொலி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளது. அப்பொழுது சிறப்பு பிரிவினருக்கு எந்த மாதிரியான மருத்துவ வசதி செய்து தர வேண்டும் எனவும், வீட்டில் இருக்கும் நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள், உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகள் குறித்தும், நோய் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிந்து அதற்கான ஆலோசனைகளை எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்தும் அரசு, தனியார் துறைகளில் இணைந்து இந்தச் சேவைகளை அவர்களுக்கு கொண்டுச் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை முடிவுகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்து, சிறப்பு கவனம் தேவைப்படும் நோயாளிகளுக்கு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவர்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், அவர்களின் உடல்நிலை சீராக வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க... கரோனா தடுப்புப் பணி - 2,500 களப் பணியாளர்கள் தேர்வு!