சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்து பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் அவரது இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
தேர்தல் முடிவுகள் வந்தபின்பு சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்றுவார் என சிலர் ஆரூடம் கூறிவந்த நிலையில், அதற்கான எந்த சமிக்கையையும் காட்டமால் இருந்தார் சசிகலா. தற்போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் பனிப்போர் உச்சகட்டத்தில் இருப்பதாக நம்பப்படும் சூழ்நிலையல், சசிகலா தனது ஆதரவாளர் ஒருவரிடம் பேசும் ஆடியோ நேற்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நேற்று வெளியான ஆடியோவில், "நான் சீக்கிரம் வந்துடுறேன். கட்சி எல்லாம் சரி பண்ணிக்கலாம். தைரியமா இருங்க எல்லாரும். நிச்சயம் வந்துவிடுவேன்" எனப் பேசியது பதிவாகியிருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.
இன்று வெளியான ஆடியோவில், ஆதரவாளரை நலம் விசாரிக்கும் சசிகலா, "கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்தோம். விரைவில் நல்லமுடிவோடு வந்துடுவேன். தைரியத்தோடு இருங்க. அவர்கள் சண்டைப்போடுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கு. கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டேன். கரோனா தாக்கம் குறைந்ததும் நல்லமுடிவோடு வந்துவிடுவேன்" எனப் பேசுவது பதிவாகியுள்ளது.
நேற்றும், இன்றும் வெளியான ஆடியோ அதிமுகவில் எந்த அதிர்வையும் ஏற்படுத்ததாது, அவரது ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் இது உற்சாகத்தை தரும் என அரசியல் நோக்கர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என்று முதலமைச்சர் இருக்கக் கூடாது' டிடிவி!