பெங்களூரு: சசிகலா சுவாசக்கருவிகள் உதவியின்றி, கடந்த 12 மணி நேரமாக இயற்கையாக சுவாசித்து வருவதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று, சிறையில் இருந்த சசிகலா, இன்று தண்டனை காலம் நிறைவடைந்து விடுதலை செய்யப்பட்டார். சிறை நடைமுறைகள் நிறைவுற்று, சரியாக 11 மணியளவில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 20 ஆம் தேதி இரவு போரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், சசிகலாவுக்கு கரோனா இருப்பதாக உறுதியானது.
இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது உடல் நிலையை விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் குழு கண்காணித்துவருகிறது. இந்த நிலையில், காலை 11.30 மணியளவில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள்படி, சசிகலா நடராஜனுக்கு(66) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 12 மணி நேரமாக, சுவாசக்கருவிகள் இன்றி, சசிகலா இயற்கையாக சுவாசிக்கிறார்.
கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள்படி, எவ்வித அறிகுறிகள் இல்லாது இருந்தால் 10 ஆவது நாள் அல்லது தொடர்ந்து மூன்று நாள்கள் சுவாசக் கருவிகள் உதவியின்றி, இயற்கையாக சுவாசித்தால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அவர் அனுமதிக்கப்படுவார்.
தற்போது மருத்துவமனையிலேயே சிகிச்சையைத் தொடர, சசிகலா, அவரது உறவினர்கள் முடிவெடுத்துள்ளனர் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.