சென்னை: சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கியதன் காரணம் குறித்து மனம் திறக்கிறார், தயாரிப்பாளர் மணிகண்டன். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO of Google) சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார்.
சுந்தர் பிச்சையின் தந்தை மதுரையை சேர்ந்தவர் என்றாலும் குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறினார். அசோக் நகரில்தான் அவர் முதல் முதலாக வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் சுந்தர் பிச்சை பிறந்தார். சென்னையில் உள்ள பள்ளியில் படித்த அவர், 20 வயது வரை அசோக் நகர் வீட்டில் தான் வசித்துள்ளார். அதன் பின்னர் படிப்பு முடிந்து தற்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை விற்க, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் தந்தை முன்வந்துள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட நடிகரும் தயாரிப்பாளருமான சி.மணிகண்டன், சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சி.மணிகண்டன் நமது ஈடிவி பாரத்திடம் அளித்த பிரத்யேக பேட்டியில் இதுகுறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனது அலுவலகம் அசோக் நகரில் தான் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் அங்குதான் உள்ளேன். அங்கு வீடு வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அப்போது எனது நண்பர் மூலமாக அங்கு வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளதை அறிந்தேன். அவர், அது பெரிய ஆளின் வீடு என்று சொன்னார்.
அதன் பிறகு, நான்கு மாதம் கழித்து சுந்தர் பிச்சையின் தந்தை வந்தார். என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். அதன்பிறகு, ஆவணங்களை சரிபார்த்து விட்டு சம்மதித்தனர். பழைய வீடாக இருப்பதால் நாங்களே இடித்து தருவதாக கூறினார். எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் நேர்மையாக அனுமதி வாங்கி வீட்டை இடித்துவிட்டு என்னிடம் கொடுத்தார்.
தென்காசியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எனக்கு ஒரு சொந்த வீடு வாங்கி கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தற்போது நிறைவேறி உள்ளது. அதுவும் சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கியது எனது அதிர்ஷ்டம் தான். சுந்தர் பிச்சையின் பொற்றோருக்கு இந்த இடத்தை பார்த்துக் கொள்ள முடியாததால் விற்க முடிவு செய்தனர். அவரது வீட்டை வாங்கியது எனக்கு பெருமைதான்.
குடிசை வீட்டில் பிறந்து உழைப்பின் காரணமாக சென்னையில் சொந்த வீடு வாங்கியுள்ளேன். அதுவும் சுந்தர் பிச்சையின் வீடு என்பதால் உடனே வாங்கிவிட்டேன். வெளியில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் சொல்ல வேண்டியிருந்தது. முறையாக எல்லா அனுமதியும் வாங்கி விட்டேன். அடுத்த மாதம் பூஜை போடப்பட்டு வீடு கட்டும் பணி தொடங்க உள்ளதாக” அவர் தெரிவித்தார். இந்த செய்தி திரை பிரபலங்கள் என அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பணமதிப்பிழப்புக்கு பின் பொருளாதார நிலை என்ன?... வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்க்கட்சிகள் கோரிக்கை!