சென்னை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ள சந்தையில் லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் முன்னதாக எச்சரித்து இருந்தார்.
அது மட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருடன் காவலர்கள் யாரேனும் தொடர்பில் இருந்தால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவரை தனிப்படை காவலர்கள் கைது செய்தால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லை எனில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு!
அந்த வகையில், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததாக கூறி சென்னையில் சுமார் 15 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்பேடு, மதுரவாயல், விருகம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஆறு உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் உள்பட 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது மேலும் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறையினரிடையே கலக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் காவல் துறையினர் யாரும் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கவுந்தபாடி அருகே 4 ஆண்டுகளாக ஆடு, கோழிகளை திருடி வந்த நபர்களுக்கு தர்ம அடி!