சென்னை: கடல் உயிரினங்கள் அதிக அளவில் காணப்படும் கடற்கரைகளுள் பெசன்ட் நகர் கடற்கரையும் ஒன்று. இந்த கடற்கரையில், இரவு நேரத்தில் ஆமைகளைக் காண முடியும். அதேபோல், சிலவகை சிப்பி போன்ற உயிரினங்கள் மணற்பரப்பிலும் காணப்படும். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெசன்ட் நகரின் கடற்கரையிலும், கரையோர நீர்நிலைகளிலும், ப்ளூ டிராகன்கள் (Glaucus Atlanticus) என கூறப்படும் ஒரு வகை கடல்வாழ் உயிரியைக் காண முடிகிறது.
இது குறித்து கடல் உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், “இந்த வகை உயிரினங்கள் பொதுவாக ஆழ்கடலில்தான் இருக்கும். இது ப்ளூ டிராகன் அல்லது ப்ளூ பட்டன் என்று அழைக்கப்படும். இந்த வகை ப்ளூ டிராகன்கள் சற்று நச்சுத்தன்மை கொண்டவை. இது கொட்டினால், கடுமையான வலி ஏற்படும். மேலும், கடலின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பத்தை இதனால் தாங்க முடியாது.
வெப்பம் அதிகமானால் இது உயிரிழக்க நேரிடும். இந்த கடல்வாழ் உயிரி, காரைக்கால் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்னால் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. மேலும், சமீபத்தில் வீசிய புயல் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக, இவை கரைக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம்” என தெரிவித்தனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இது குறித்து எங்களுக்கு தகவல்கள் வந்தன. எங்களின் ஒரு குழு, பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடல்வாழ் உயிரி குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது” என தெரிவித்தனர்.
மேலும், இந்த ப்ளூ டிராகன்களை புகைப்படம் எடுத்த ஸ்ரீவாட்ஸன் தனது சமூக வலைத்தளத்தில், “நீல டிராகன் என்பது கடல் கூடு இல்லாத நத்தை இனமாகும். இது உலகம் முழுவதும் அதிக அளவில் காணப்படும். இது தனது வயிற்றின் மூலம் காற்றை உறிஞ்சி, அதன் பிறகு கடலின் மேற்பரப்பில் மிதக்கின்றன. மேலும், இந்த வகை உயிரினங்கள் வேட்டையாடுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் கடல் நீரோட்டங்களின் உதவியுடன் அதிக தூரம் நகர்கின்றன. இந்த ப்ளூ டிராகன்கள் விஷத்தன்மை வாய்ந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: வெள்ளம் எப்போ வடியுமோ..? அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவில்லை என தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலைமறியல்