அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இணை இயக்குநர், பெண் அலுவலர் உள்பட ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத் துறையில் பணிபுரியும் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேலும் தேர்வுத் துறை இயக்குநர் அறையில் உள்ள மற்றொரு அறையில் ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி இயக்குநருடன் பணிபுரிந்துவந்த தட்டச்சர், ஒரு அலுவலருக்கும் கரோனா நோய் கண்டறியப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் ஒருவருக்கு நேற்று கரோனா உறுதியானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சென்னை தேர்வுத் துறை இணை இயக்குநராகப் பணியாற்றிவருபவர் தனது சொந்த ஊரான தருமபுரிக்குச் சென்றார். அங்கு அவருக்கு உடலில் அறிகுறி இருந்ததால் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை. இன்று வெளியாகும் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இவருக்கு நோய் இருப்பது அறிவிக்கப்படும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் பரிசோதனை மேற்கொண்டதால் சென்னைக்குப் பணிக்குச் செல்லக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். அரசு தேர்வுத் துறையில் பணிபுரிந்துவரும் சிலர் தங்களுக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருந்தாலும் சிகிச்சை பெற்றுக்கொண்டு பரிசோதனை செய்யாமல் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
இதனால் தேர்வுத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் தலைமை அலுவலகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவது ஊழியர்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற அச்சத்தில் ஊழியர்கள் விடுப்பு எடுத்து தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகத்திற்கும் தண்ணீர் வழங்கிய ஆண் ஒருவர் கரோனா தீநுண்மி பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநரின் ஓட்டுநர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்துவருவது அங்கு பணிபுரிபவர்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.