சென்னை: தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் காய்கறி வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு விதிமுறைகளுடன் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், பொது மக்கள் அவற்றைக் கடைபிடித்து வருகிறனர்.
அதன் ஒரு பகுதியாக தண்டையார்பேட்டை மார்க்கெட்டில் மக்கள் அதிகம் கூடுவதால் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு அருகிலுள்ள அரசு பள்ளிக் கட்டடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது. நான்கு நாள்களாக அங்கு அவர்கள் வியாபாரம் செய்து வந்த நிலையில், நேற்று (மே.21) திடீரென மாநகராட்சி அலுவலர்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்து அதிகாலை முதலே பள்ளிக்கூடத்தின் வாசலை பூட்டு போட்டு பூட்டி வைத்தனர்.
இதனால் காலையில் வியாபாரம் செய்வதற்கு வந்த காய்கறி வியாபாரிகள் பள்ளிக்கூட வாசல் பூட்டு போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காய்கறிகள் உள்ளே இருக்கும் நிலையில் காய்கறிகள் அழுகிவிடும் என்பதனாலும், வியாபாரம் செய்ய முடியாததாலும் வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய வியாபாரிகள், ”கூட்ட நெரிசல் இல்லாமல் அரசு பள்ளிக்கூடத்தில் வியாபாரம் செய்வதற்கு மாநகராட்சி அலுவலர்கள் அனுமதியளிக்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரினர்.
பின் தண்டையார்பேட்டை காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியதைத் தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு!