சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் தமிழ்நாடு முழுவதும் 1,541 சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சேவையாற்றி வருகிறது.
கரோனா தொற்று காலங்களில், சித்தா மருத்துவப் பிரிவுகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின்போது, 79 சிறப்பு சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு, இந்த மையங்களின் மூலமாக சுமார் 70,000 மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தும் வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இயங்கும், இந்திய மருத்துவப் பிரிவு உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருந்தகங்களில் காலியாக உள்ள உதவி மருத்துவ அலுவலர்கள் (ஆயுஷ்) பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னையில் இரண்டு மையங்களில் இதற்கான தேர்வுகள் நடைபெற்றன.
அதன்படி, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 சித்தா உதவி மருத்துவர்கள், 5 ஆயுர்வேதா உதவி மருத்துவர்கள், 5 ஓமியோபதி உதவி மருத்துவர்கள், என 15 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க:ஆம்பூரில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!