சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி கின்னஸ் சாதனை ஓட்டம் - கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. மாரத்தானில் கலந்து கொள்வோருக்கான முன்பதிவு துவக்க நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் காந்தி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தானில் மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் 500 ரூபாயாகவும், திருநங்கைகளுக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிக்கான முன்பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். தயாநிதி மாறனிடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன். அவர் பெயரை பேனரில் போடவில்லை, இந்த நிகழ்ச்சியை இந்த கல்லூரியில் நடத்த காரணம், இந்த மாநில கல்லூரி, முதல்வர் ஸ்டாலின் பயின்ற கல்லூரி.
நான் சாதனை படைக்க வேண்டும் என்று ஓடவில்லை. என் சர்க்கரை நோயை குறைக்கவே மாரத்தானில் ஓடுகிறேன். இன்றைக்கு 139 மாரத்தான்களில் ஓடியிருக்கிறேன். இந்தியாவின் 36 மாநிலங்களிலும் ஓட வேண்டும் என்பது இலக்காக வைத்துள்ளேன். 140 வது மாரத்தான் நாளை ஊட்டியில் ஓட இருக்கிறேன். 1,611 பேர் இதுவரை மாரத்தானில் பங்கேற்க பெயர் கொடுக்க முன் வந்துள்ளார்கள். மேலும் திருநங்கைகளுக்கான 100 ரூபாய் கட்டணத்தையும் சென்னை தெற்கு மாவட்ட திமுகவே பொறுப்பேற்கும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு 63 வயது என்றால் நம்ப முடிகிறதா. எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷன் அவர். இந்த முறை பதிவு நிகழ்ச்சியையே இவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக நடத்தி இருக்கிறீர்கள். விளையாட்டு துறை அமைச்சராக இங்கு வந்தது பெருமை கொள்கிறேன்.
மா.சுப்பிரமணியன் என்றால் அமைச்சர், மாவட்ட செயலாளரை தாண்டி ஒரு மாரத்தான் வீரர். உலகத்தில் ஃபிட்டான அமைச்சர் என்றால் முதலமைச்சருக்கு அடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் தான். உள்ளூரில் மட்டுமின்றி உலக அளவிலும் மாரத்தானில் ஓடுகிறார்.
இவரை பார்க்கும் போது, எனக்கு பொறாமையாக இருக்கிறது. எப்படிடா இப்படி ஃபிட்டாக இருக்கிறார். மாவட்ட நிகழ்ச்சியையும் நடத்துகிறார். அதிலும் சேகர் பாபு, சிற்றரசு, மா. சுப்பிரமணியனுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கிறது.
யார் மாவட்டத்தில் அதிகமாக நிகழ்ச்சி நடக்கிறது என்று. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது நான் தான். இவர்களுக்கு பயந்தே நான் தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் சென்று விடுவேன், சென்னையில் இருந்தால் இவர்கள் மூவரும் கூட்டி சென்று விடுவார்கள். போட்டி போட்டு கொண்டு மக்கள் பணியை செய்து வருகிறார்கள்.
அமைச்சர் மா.சு எந்த மாவட்டத்திற்கு ஆய்வுக்கு சென்றாலும் பாவம் அரசு அதிகாரிகள் தான் அவர் பின்னால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். காலை 4 மணிக்கே ஆய்வு என்று சொல்லி ஓடி கொண்டு இருக்கிறார். திருநங்கைகளுக்கான மாரத்தான் கட்டண தொகை 100 ரூபாயை நான் கொடுக்க நினைத்தேன். அதையும் அண்ணன் மா.சுப்பிரமணியன் தொகுதியில் இருந்து கொடுப்பதாக அறிவித்து விட்டார்.
அதனால் இந்த மாரத்தானில் எத்தனை திருநங்கைகள் கலந்து கொண்டாலும் திருநங்கைகளுக்கான ஊக்கத் தொகையாக 1000 ரூபாய் எனது தொகுதி நிதியில் இருந்து இளைஞர் அணி சார்பாக தருகிறேன். தயாநிதி மாறனுக்கு அழைப்பே விடுக்கவில்லை அவர் வந்திருக்கிறார் என்று சொன்னார்கள்.
ஆனால் அடுத்த வருடம் வந்து தான் ஆக வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 3 மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு இருப்பதை காட்டி தலைவர் யாரை பாராளுமன்ற வேட்பாளராக அறிவித்தாலும் சரி , கடந்த முறை வாங்கிய வாக்குகளை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதாகவும் அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
இது வாட்ஸ் அப் அரசியல் களம். வாட்ஸ் அப் யுகம். பகுத்தறிவு - என்ன செய்தி வந்தாலும் அதை ஆராய்வதில்லை. பள்ளி கல்வி துறை அமைச்சர் தனது அறிவிப்புகளில் முக்கியமாக ஒன்றை அறிவித்திருந்தார். பள்ளி மாணவர்களுக்கு ஒரு பாடமாக, அதாவது வருகின்ற பதிவுகள், இப்போது எல்லாரும் கையில் வாட்ஸ் அப்போடு தான் இருக்கிறோம். ஒரு செய்தி வந்தால் அது உண்மையா, பொய்யா என்று ஆராயாமலே பார்வர்டு செய்து விடுகிறோம்.
தமிழ்நாட்டில் அருவருப்பான அரசியலை சிலர் செய்கிறார்கள். சிலர் பொய்யான செய்தியை பரப்புகிறார்கள், அதை பகுத்தறிவு மூலம் வளர்த்து கொண்டு வருகின்ற செய்திகள் உண்மையா, பொய்யா என்று விசாரித்து அனுப்புங்கள். இந்த முறை அதிகமானவர்கள் மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் குறித்து பரிசீலனை - வருவாய்த்துறை அமைச்சர் தகவல்