சென்னை: அண்ணா அறிவாலயத்தில் 2016-21ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை வெளியிட்ட சி.ஏ.ஜி அறிக்கை (CAG Report) குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஏப்.26) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பள்ளிக்கல்வித்துறையில் பெரிய அளவில் மாணவர் சேர்க்கையில் பின்தங்கி இருக்கின்றனர். எப்படிப்பட்ட வீண் செலவுகளை அவர்கள் செய்து இருக்கிறார்கள் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெளிப்படையாக காண்பித்துவிட்டது. மேலும், எங்கள் ஆட்சி அமைந்து எந்த அளவுக்கு அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்தி இருக்கிறோம் என்பதை பெருமையோடு கூற முடியும்'' என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் அளவிற்கு மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பட்டியல் இன மக்களுக்கு வழங்க வேண்டிய 60% வீடுகளை முறையாக வழங்கவில்லை என்பதை அறிக்கை காண்பித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அதிலும், இந்த வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் மேப்பிங் நகைச்சுவையாக இருப்பதாகவும் சாடினார். இதுவரையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகள் செய்த 6 அதிகாரிகளை பணிநீக்கம் செய்து இருப்பதாகவும், ஒரு நிர்வாகம் எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு 2016 முதல் 2021 நடைபெற்ற அரசு (அதிமுக ஆட்சி) நிர்வாகம் சான்று ஆகும் என்றும் பகிரங்கமாக குற்றம்சுமத்தினார்.
'' 'திராவிடம்' (Dravidam) என்ற பெயரைப் பயன்படுத்தும் எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அதையே அவர்கள் ஒழுங்காக செய்யவில்லை'' என்று சாடினார்.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சரை பொறுத்தவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை என்றும்; அதிமுக ஆட்சியில் 1.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் விடுபட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 14 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும்; தேவைக்கேற்ப நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை வெளியிட்டு வரும் ஆடியோ குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தெளிவான விளக்கத்தை அளித்து விட்டார் என்றும்; இதற்கிடையே, 'நாங்களும் அரசியல் செய்கிறோம்' என்பதை காண்பித்துக் கொள்வதற்காகவே பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அவ்வப்போது ஆளுநரை சந்தித்து வருவதாகவும் சாடினார். மேலும், அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு