சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் (ஏப்.7), நாளையும் (ஏப்.8) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றும் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: TN School Leave: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு: எவ்வளவு நாள் தெரியுமா?