சென்னை: ஆவடி கோயில் பதாகை பகுதியைச் சேர்ந்தவர் புகாராஜ் (49). இவர், இதே பகுதியில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (34) என்பவர் கடந்த 14ஆம் தேதி 3 சவரன் நகையை கொடுத்து ரூபாய் 75 ஆயிரம் வாங்கிச் சென்றுள்ளார். இதையடுத்து நகையை பெற்று கொண்ட புகாராஜ் நகையை பரிசோதித்துள்ளார்.
அதில் வெங்கடேசன் அடகு வைத்து பணம் பெற்றது போலி நகை என தெரியவந்தது. இது குறித்து புகாராஜ் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அதே பகுதியிலுள்ள மற்ற அடகு கடைகளுக்கு வெங்கடேஷன் குறித்து தகவல் தெரிவித்து உஷார் படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இதே போன்று அந்நபர் போலி நகைகளை அப்பகுதியில் உள்ள வேறொருவரின் நகை கடையில் அடகு வைத்து பணம் பெற முயன்றுள்ளார். சுதாரித்து கொண்ட கடைகாரர் கையும் களவுமாக வெங்கடேஷனை பிடித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியன.
வெங்கடேசன், தனியாக இருக்கும் அடகு கடைகளை குறிவைத்து போலி நகைகளை கொடுத்து சரியாக 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்று வந்துள்ளார். இதே போன்று இவர் ஆவடி, அம்பத்தூர், கள்ளிக்குப்பம், சுரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூன்று சவரன் போலி நகை அதற்கு 75 ஆயிரம் ரூபாய் என பெற்று சுமார் 4 லட்சத்திற்கும் மேல் நூதனமான முறையில் ஏமாற்றியது தெரியவந்தது.
ஏமாற்றும் பணத்தில் 5 ஆயிரம் ரூபாய் வெங்கடேசனுக்கு கமிஷன் தொகையாகவும் மீதமுள்ள பணம் போலி நகை செய்து கொடுத்த நபருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலி நகைகளை வைத்து ஏமாற்றி பணம் பறித்த வெங்கடேசனை கைது செய்த காவல் துறையினர், நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலி நகைகளை செய்து கொடுத்த நபர் குறித்து விசாரனை நடத்தி தேடி வருகின்றனர். வெங்கடேசன் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் போலி நகைகளை வைத்து பணம் பெறும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நூதன திருட்டில் ஈடுபட்ட வங்கி ஊழியர் - சிக்கியது எப்படி?