சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர், கடந்த 2019 ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, சகோதரர் திலீப்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
திருவள்ளூரை அடுத்த சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடுகோரி, தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றாலும், மோட்டார் சைக்கிளுக்கு இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 விழுக்காடு வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இன்ஸ்யூரன்ஸ் செய்யும்போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா? என்பதை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்ஸ்யூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:சிறப்பு அமர்வுக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கே கடிதமா.. அதிமுக உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் கண்டனம்