சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173, சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
தீவிர கொசு ஒழிப்பு பணி
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தத் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் 3,463 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களின் மூலம் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள், 251 கையினால் கொண்டு செல்லும் புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகை பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசை பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் புகைப்பரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்காளில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், 371 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.