இயந்திரம் மற்றும் வாகனங்களின் உராய்வினால் ஏற்படக்கூடிய தேய்மானத்தைக் குறைப்பதற்காக லூப்ரிகன்ட் ஆயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆயில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட பின்னர் வியாபாரிகள் மிக குறைந்த விலையில் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் இந்த ஆயிலில் உள்ள துகள்களை மிக நுணுக்கமாகப் பிரித்து எடுப்பதன் மூலம் மிகவும் மெலிதான கிராப்பின் என்ற ஒரு மூலப்பொருளை ஐஐடி நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் மெக்கானிக்கல் துறை உதவிப் பேராசிரியர் சத்யன் சுப்பையா கூறுகையில், ‘நாம் வழக்கமாக பயன்படுத்தும் பென்சிலில் உள்ளது கிராபைட். இதனைப் படிப்படியாக ரசாயன கலவை மூலம் பிரித்தால் கிராப்பின் வரும். இதுபோன்ற கிராப்பின் பொருள் மின்சக்தி கடத்துவதுடன், வலிமையாகவும் இருக்கும். நாம் தற்போது விமானங்களை அலுமினியத்தில் இருந்து மாற்றி எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் மூலம் தயாரித்து வருகிறோம். அதுபோன்ற சூழ்நிலையில் விமானம் வானில் பறக்கும்போது மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது.
ஆனால் பிளாஸ்டிக் பொருட்களுக்குள் கிராபின் துகள்களைச் சேர்த்து தயாரித்தால் எளிதில் மின்சாரம் கடத்தப்பட்டு மின்னல் தாக்குதல் போன்றவைகளைத் தவிர்க்கலாம். அதேபோல் நாம் பயன்படுத்தும் செல்ஃபோனில் உள்ள சிலிகான் பொருளுக்கு பதில் கிராபின் பயன்படுத்தும்போது வேகமாகச் செயல்படும். இதனை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லூப்ரிகன்ட் ஆயிலில் இருந்து எளிதில் பிரித்து எடுத்து தயாரிக்க முடியும். இது குறித்து மேலும் ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தி வருகிறோம்’ என்றார்.
சென்னை ஐஐடியில் மெக்கானிக்கல் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்துவரும் மாணவர் வாசிம் நிசாத் கூறுகையில், ‘இருசக்கர வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட லூப்ரிகன்ட் ஆயிலை பயன்படுத்தி கிராப்பின் என்ற புதிய பொருளை உற்பத்தி செய்ய முடியும். மேலும் இந்த பொருளினை பயன்படுத்துவதால் எடை குறைவாக இருப்பதுடன், மிகுந்த வலுவான திறன் கொண்டதாகவும் இருக்கும்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எட்டு ஆண்டுகள் காணாத சரிவை கண்ட மாருதி சுஸுகி