சென்னை: முதுகலை மருத்துவப்படிப்பிற்கான 2022-23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. தேசிய மருத்துவ கலந்தாய்வுக்குழு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் 10 இடங்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 4 இடங்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 6 இடங்கள், மதுரை மருத்துவக் கல்லூரியில் 7, தஞ்சை மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் தலா 10 இடங்கள், நெல்லையில் 6, திருச்சியில் ஒரு இடம், தேனியில் 2 இடங்கள், ஈரோட்டில் 2 இடங்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 9 இடங்கள், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 5 இடங்கள், தூத்துக்குடியில் 4 இடங்கள், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வில் அதிகளவில் காலியாக இருந்ததால், சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வு வரும் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வில் எம்டி, எம்எஸ், டிப்ளமோ, டிஎன்பி ஆகிய படிப்புகளில் 2244 இடங்களும், 62 எம்டிஎஸ் இடங்களும் உள்ளன.
இந்த இடங்களில் சேர விரும்புபவர்கள் 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும்; இடங்களை தேர்வு செய்தபின்னர் சேரவில்லை என்றால் முதுகலைப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுத நடப்பாண்டில் தடைவிதிக்கப்படும் எனவும்; இதனை, ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி மொழி அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் ஐடிக்கும் ஆதார் அட்டைக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன தெரியுமா?