சென்னை: பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக, மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே கந்தநேரியில் ஜூன் 11ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூன் 10) இரவு 9 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நேரம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை வரும் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைக்க அழுத்தம் கொடுக்கக் கூடாது என அமித்ஷாவிடம் ஈபிஎஸ் தரப்பினர் கூறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டுமென அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் கைகோர்த்துள்ள நிலையில் மீண்டும் இவர்களை அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் அமித்ஷா, சென்னையில் இருந்து ஜூன் 11ஆம் தேதி மாலையில் வேலூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஆய்வுகளும், சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த பொதுக்கூட்டத்தை பெரிய அளவில் நடத்த பாஜகவினர் தயாராகி வருகின்றனர். 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் மத்திய பாஜக மிகவும் கவனம் செலுத்தி வருகிறது.
அதனால், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகள், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சி அமைத்த நிலையில் மூன்றாவது முறை அதிக எண்ணிக்கையான இடங்களில் வெற்றி பெற்று மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதில் பாஜக தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.