சென்னை: முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கான (டான்செட் 2023) ஹால் டிக்கெட் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவி மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA எம்பிஏ, மற்றும், எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (டான்செட் 2023) விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடைபெறுகிறது
CEETA, எம்.இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாயும், இதரபிரிவினருக்கு 1500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வுக் கட்டணமும் இதில் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவர்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் விண்ணப்பித்தனர். இறுதி ஆண்டில் இறுதிப் பருவத்தேர்வு எழுதும் 2022-23ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்கள் முதுகலைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் 11ஆம் தேதி :https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இந்தத் தேர்வு 15 நகரங்களில் 40 மையங்களில் நடைபெற உள்ள தேர்வினை எழுதுவதற்கு 39 ஆயிரத்து 249 பேர் பதிவு செய்துள்ளனர்.

டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை 25ஆம் தேதி காலையில் 9820 பேரும், எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை 25 மாலையில் 24,468 பேரும் எழுதுகின்றனர். CEETA-PG எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வினை 26ஆம் தேதி 4961 பேர் எழுத உள்ளனர்.
இவர்களுக்கான ஹால் டிக்கெட் குறித்தோ தேர்வு குறித்து எழும் சந்தேகங்களுக்கு வரும் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் நுழைவுத்தேர்வு மையத்தின் தொடர்பு எண் 044 22358314, 044 22358289 ஆகிய எண்களிலோ அல்லது tanceeta@gmail.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்புக் கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
முதுகலைப் பொறியியல் படிப்பில் மாணவர்கள் இந்தாண்டு நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரி, உறுப்புக் கல்லூரிகள், அரசு பாெறியியல் கல்லூரிக்கான கலந்தாய்விற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மின்துறை அஜாக்கிரதையால் 7 ஆண்டுகளில் 89 யானைகள் மின்சாரம் தாக்கி பலி" - உயர் நீதிமன்றம் கண்டனம்!