நீலகிரி மாவட்ட மலர்கள் விற்பனை விவசாயிகளின் கடன்களை வசூலிக்கும் வங்கிகளின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட மலர்கள் வளர்ப்பு சிறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.விஸ்வநாதன் தாக்கில் செய்துள்ள மனுவில், "2003ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி துறையும் வீழ்ச்சியை சந்தித்ததால், மலர்கள் வளர்ப்பு விவசாயத்திற்கு விவசாயிகள் மாற தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. அவ்வாறு மாறும்போது, 500 சதுர மீட்டர் அளவிலான நறுமண மலர்கள் வளர்ப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க ஏழு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டது.
இதன்படி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி மூலம் கடன் பெற்று மலர்கள் விவசாயம் செய்த நிலையில், 2008ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய புயல் காரணமாக விவசாயம் முழுமையாக பாதிப்படைந்தது. ஆனால், கடன் தொகையை மீண்டும் வசூலிக்க வங்கிகள் நடவடிக்கையை கடுமையாக்கியதால் 2010ஆம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும் பல மனுக்களை கொடுத்துள்ளோம்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அமைத்த கூட்டுக்குழுவின் மூலம் எடுக்கப்பட்ட முடிவில், அசல் தொகை ஏழு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயில், பாதி தொகையை செலுத்தவும், வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை தற்போது வங்கிகள் தீவிரப்படுத்தியுள்ளதால், கடன் வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பார்த்திபன், சுவாமிநாதன் அமர்வு முன்பு, அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.