சென்னை அம்பத்தூர், இந்தியன் பேங்க் காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் கதிரேசன் (62). இவர், அதே பகுதியில் உள்ள கள்ளிக்குப்பம், கங்கை நகர் முதல் மெயின் ரோட்டில் கேஸ் ஸ்டவ் பழுது நீக்கும் கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், கதிரேசன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அத்தெருவில் மின் கம்பத்தில் இருந்த கம்பி ஒன்று அறுந்து, நின்றுகொண்டிருந்த கதிரேசன் மீது விழுந்தது. இதில், அவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
மேலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.