சென்னை ஆயிரம் விளக்கு சுகந்திரா நகர் பகுதியில் நேற்று மாலை திமுக பிரமுகர் மாணிக்கம் என்பவர், அவரது காரை சாலையின் நடுவே நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த முதியவர் ஒருவர், அந்த காரை கடக்க முயன்றபோது, லேசாக காரில் உறசியுள்ளார். இதனைக் கவனித்த மாணிக்கத்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் அந்த முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து மாணிக்கம், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் இணைந்து முதியவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் தட்டிக் கேட்டபோது அவர்களையும் அநாகரீகமான முறையில் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த முதியவருக்கு முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து அப்பகுதி வாசி பிரான்சிஸ் கூறுகையில், இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மாணிக்கத்தின் மனைவி செல்வி, திமுக ஆயிரம் விளக்கு ரத்து செய்யப்பட்ட கவுன்சிலர் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.